யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்து இலங்கையர்கள் இருவர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் 691 பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்த ஒரு விசேட விமானம் மூலம் ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டயமன்ட் பிரின்ஸஸ் கப்பலில் சேவையாற்றிய இலங்கை ஊழியர்கள் இருவரும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளதாகவும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, “தனிமைப்படுத்தப்பட்ட டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த இரண்டு இலங்கையர்கள் டோக்கியோவிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக டெல்லிக்கு வந்துள்ளனர் என இந்தியாவிற்கான பதில் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இந்த நடவடிக்கையை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசாங்கம் மற்றும் குறித்த விமான சேவை நிறுவனத்திற்கும் அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.
குறித்த இலங்கையர்கள் இருவரும் 14 நாட்களுக்கு பின்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments
No Comments Here ..