15,May 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

போர்க்குற்ற விசாரணை இதுவரை நடக்கவேயில்லை

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச ரீதியான அறிக்கை தயாரிக்கும் பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இதுவரை சர்வதேச விசாரணை இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகையினால் சர்வதேச விசாரணை நடைபெற்றுள்ளதாகவோ அல்லது விசாரணை முடிவடைந்துவிட்டதாகவோ யாரேனும் கூறுவார்களாயின் அது தவறு என்றும் அவ்வாறான சர்வதேச விசாரணை இனிமேல் தான் நடத்தப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெற்று முடிந்து விட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் மேடைகளில் கூறி வருகின்றார்.

அவர் கூறுகின்ற கருத்து ஆனது இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச ரீதியான பூர்வாங்க விசாரணைகளே இடம்பெற்று உள்ளன. அது தொடர்பான அறிக்கை வெளி வந்திருக்கின்றது. அதில் எழுத்து மூலமான வாக்குமூலங்கள் அறிக்கைகள் பெறப்பட்டு வலுவான அறிக்கை வெளி வந்தது.

பொதுவாக பாரிய குற்றங்களுக்கு மேல் நீதிமன்றங்கள், ரயல் அட்பார் நீதிமன்ற விசாரணைகள் ஊடாகவே நீதிகளை பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறான ஓர் பொறிமுறையை நாம் கோரி வருகின்றோம்.

அந்த வகையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள், சர்வதேச வழக்கறிஞர்கள், சர்வதேச புலனாய்வாளர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய விசாரணையே நாம் கோரி நிற்கின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் கூறுவது O.I.L.S விசாரணை அறிக்கையை வைத்தே குறிப்பிடுகின்றார். அது இலங்கை விசாரணைக்கான அலுவலகம் அதில் வாக்குமூலம் அறிக்கை அனுப்புமாறு கோரப்பட்டு பல வாக்குமூலம் அனுப்பப்பட்டிருந்தது. சர்வதேச ரீதியான பூர்வாங்க விசாரணையில் அந்த அறிக்கை 2015 ஆம் ஆண்டு வெளிவந்தது.

அந்த அறிக்கை வெளி வந்து மனித உரிமைப் பேரவையில் வெளியிடப்பட்டது. அப்போது இலங்கை அரசு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் புதிய அரசு தங்களுக்கு கால நீடிப்பு தரவேண்டும் என்றும் கலப்புப் பொறிமுறை ஊடான விசாரணைக்கு இணை அனுசரனை வழங்கியது.

சுமந்திரன் கூறுவது போல சர்வதேச விசாரணை முடிவடைந்து இருந்தால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கால நீட்டிப்பை ஏன் கோரியது. எனவே சர்வதேச விசாரணைதான் நடத்தப்பட வேண்டும். அதனை தான் நாம் வலியுறுத்தி வருகின்றோம்

சர்வதேச விசாரணை ஊடாக சர்வதேச நீதிபதிகள் வழக்கறிஞர்கள் புலனாய்வாளர்களே உள்ளடக்கி மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் ஊடாக உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அதனை நாம் இன்றுவரை வலியுறுத்தி வருகின்றோம்.

மேலும் இலங்கை அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்திலிருந்து விலகியிருக்கின்ற நிலையில் சர்வதேச சமூகம் காலம் தாழ்த்தாது பாதுகாப்புசபைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே வேளை நடைபெறவிருக்கின்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிடுவதற்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தயாராகி வருகின்றது. அதே நேரத்தில் இத்தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் குடும்பிப்பிடி சண்டையும் குழிபறிப்புக்களுமே நடைபெற்று வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.




போர்க்குற்ற விசாரணை இதுவரை நடக்கவேயில்லை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு