நாட்டினுள் யாத்திரை மற்றும் சுற்றுலாப் பயணங்கள் இன்று முதல் மீள் அறிவித்தல் வரை முழுவதுமாக தடை செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்றுவரும் கொவிட் 19 கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையத்தின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அரசினால் இன்று மற்றும் நாளை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக இவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் அவ்வாறான சந்தர்ப்பங்களில் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எவராவது இந்த ஆலோசனைகளை மீறி செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்தார்.
பொதுமக்கள் இவ்வாறு செயற்படுவதன் மூலம் நிலைமை மேலும் மோசமடைய கூடும் என்பதால் இயன்றளவு வீடுகளில் உள்ளேயே இருக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
சுகாதாரம், உணவு விநியோகம், போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் தவிர அரசின் ஏனைய திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்த விசேட 3 நாள் விடுமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
காவல்துறை மா அதிபரின் விசேட உத்தரவின் பேரில் நாடு பூராகவும் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் விசேட சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் நபர்கள் கைது செய்யப் படுவார்கள் என பிரதி காவல்துறை அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
499 காவல் நிலையங்களுக்கு குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் வீட்டிலேயே தங்கியிருந்து நோய் பரவுவதைத் தடுப்பதற்கு ஆதரவளிக்குமாறு அவர் மேலும் தெரிவித்திருந்தார்.













0 Comments
No Comments Here ..