கவிதைத் தொகுப்பை வெளியிட்டமைக்காக பயங்கரவாத சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முஸ்லிம் கவிஞரை விடுவிப்பது உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தக் கோரும் மனு மீதான விசாரணை, சட்டமா அதிபர் திணைக்களம் முன்னிலையாகாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களமோ அல்லது பதிலளிக்க வேண்டியவர்களோ முன்னிலையாகாததால், வழக்கு ஜூலை 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, இளம் கவிஞர் அஹ்னாஃப் ஜசீம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சஞ்சய வில்சன் ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் இருந்த அரச சட்டத்தரணிகள் திகதியை, பதிவு செய்ததாக சட்டத்தரணி சஞ்சய் வில்சன் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான “நவரசம்” எனும் நூல் மூலம் மாணவர்களை 'தீவிரவாத சித்தாந்தங்களை' பின்பற்றுபவர்களாக மாற்றும் முயற்சியில் “தீவிரவாத” விடயங்களை அம்பலப்படுத்திய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டார்.
பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவினால் ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டு, கடந்த மாதம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அஹ்னாஃப் ஜசீம் கவிஞர் சார்பில் அவரது சட்டத்தரணியால் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர், பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு எதிரான அடிப்படை உரிமை வழக்கு (வழக்கு இலக்கம் SC FRA 114/2021 ) ஏப்ரல் 16ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தன்னிச்சையான கைது, தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதை மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், அஹ்னாஃப் ஜஸீமை விடுவிக்கவும், 10 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனிமனித சுதந்திரத்தைத் தடுக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதால் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இரத்து செய்யப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.
கடந்த மாாதம், ஐரோப்பிய நாடுகளின் ஒரு குழு, இலங்கை அரசாங்கம் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிஞர் அஹ்னாஃப் ஜஸீமை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தது. வழக்கு விசாரணைகள் இன்றி, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மனித உரிமை சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவும், குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகேர ஆகியோர் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அவதானம் செலுத்திய நிலையில், ஷானி அபேசேகேர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கவிஞர் மற்றும் ஆசிரியரான அஹ்னாஃப் ஜஸீம் விடுதலை செய்யப்பட வேண்டுமென, கடந்த மாதம் பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. இதனையடுத்து, ஐக்கிய நாடுகள் சபையில் ஒன்பது ஐரோப்பிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள் இந்த கோரிக்கையை விடுத்தனர்.
0 Comments
No Comments Here ..