19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

நூறு நகரங்கள் அபிவிருத்திக்குள் வவுனியாவும் இணைவு- அரசியல் இலாபம் கருதும் செயற்பாடு!

இலங்கையின் நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் வவுனியா நகரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒருவருட காலப்பகுதிக்கு முன்பாகவே நகரில் முன்னெடுக்கவேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகாரசபை அரச அதிபருடன் இணைந்து நகர சபையும் களவிஜயத்தின் மூலமாக ஆராயப்பட்டிருந்தது. 

இது தொடர்பாக வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவிக்கையில், இலங்கையின் நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் வவுனியா நகரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு வருடத்திற்கு முன்பாகவே நாம் கள நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். தற்போது சிலர் அரசியல் இலாபம் கருதி செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து, தமிழ்மத்திய மகாவித்தியாலயம், மற்றும் பொதுவைத்தியசாலை வரையான வீதி, பூங்காவீதி ஆகியவற்றில் நடைபாதைகளை அமைத்தல், மற்றும் எ9 வீதிக்கு அருகாமையில் உபவீதி ஒன்றை அமைத்து அதனோடு இணைந்தவாறான வாகன தரிப்பிடம் ஒன்றையும் அமைப்பது தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தோம்.

இந்த வேலைத்திட்டங்கள் நிச்சயம் நடக்கும். இது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் என்று சிலர் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் இதற்கான செயற்பாடுகளை கடந்த ஒருவருடத்திற்கு முன்பாகவே நாம் முன்னெடுத்திருந்தோம். ஆயினும் அது ஆரம்பிக்கப்பட்ட பின்னரே அதனை அனைவருக்கும் வெளிப்படுத்தும் நோக்குடன் நாம் இருந்தோம்.

ஆனால் அரசியல் இலாபத்திற்காகவும், சுயலாபங்களிற்காகவும் தாங்களே இதனை கொண்டுவந்ததாக சிலர் தெரிவிக்கின்றனர். எனவே இந்தப்பணிகள் கடந்த ஒருவருடத்திற்கு முன்பாகவிருந்தே இடம்பெற்றுவருகின்றது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார். மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் திலீபனுக்கும் இந்த திட்டம் தொடர்பாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வவுனியா சுற்றுலாமைய குத்தகையாளர் நகரசபையின் நிபந்தனைகளை மீறியுள்ளார். தனக்கான ஒரு இடமாகவே அவர் அதனை மாற்றியுள்ளார். எனவே ஆளுநரின் அறிவுறுத்தலின் படி அவரது ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 31 ஆம் திகதி அவரது ஒப்பந்தம் முடிவடைகின்றது. அதனுடன் அதனை நடத்துபவர் வெளியேறவேண்டிவரும். இது தொடர்பாக நீதிமன்ற வழக்கும் இடம்பெற்று வருகின்றது. வழக்கு முடிவடைந்ததும் அதனை நகரசபையே பெற்று எமது நிர்வாகத்தின் கீழ் செயற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.





நூறு நகரங்கள் அபிவிருத்திக்குள் வவுனியாவும் இணைவு- அரசியல் இலாபம் கருதும் செயற்பாடு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு