உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்களையும் அதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளையும் காப்பாற்றும் முயற்சியை தற்போதைய அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணை ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளை திசை திருப்பும் முயற்சிலேயே அரச தரப்பு செயற்படுவதாகவும் அந்தக்கட்சி தெரிவிக்கின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்று உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியை மறைப்பதற்கான நிகழ்ச்சி நிரலுக்காகவா சில முக்கிய பிரமுகர்கள் மகாநாயக்க தேரர்களை சந்தித்தனர் என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இது குறித்து மேலும் உரையாற்றிய அவர், அரச தலைவரால் நியமிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகள் தொடர்பில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்டோர் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களிடம் முறைப்பாடளிக்கின்றனர்.
நாமறிந்த சட்டங்களின் படி அவர்களால் அவ்வாறு முறைப்பாடளிக்கவோ , அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடவோ முடியாது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை சவாலுக்குட்படுத்தியுள்ளதன் மூலம் இவர்கள் அரச தலைவர் கோட்டாபயவின் அதிகாரங்களையும் சவாலுக்குட்படுத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் பொலிமா அதிபர் அறிவார்களா? இது திட்டமிடலுடன் நடந்த சந்திப்பாகவே இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது என தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..