மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவைக் கைது செய்வதற்கான சட்டமா அதிபரின் பணிப்புரை குறித்து ஆராய்வதற்காக 5 பேர் அடங்கிய விசேட குழு ஒன்றை பதில் காவல் மா அதிபர் சீ.டி. விக்கிரமரத்ன நியமித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் குரல் பதிவு வெளியானமை தொடர்பில், அவரைக் கைது செய்வதற்கான ஆணையைப் பெற்று அந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுக்குமாறு, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு சட்டமா அதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் நாமநாயக்கவின் விவகாரம் குறித்து நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை சந்தேக நபராக பெயரிடுவது குறித்தும், அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையைப் பெற்றுக் கொள்வது குறித்தும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பிரதி காவல்மா அதிபர்கள் (Deputy Inspector Generals) மூவர் உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழ ஒன்றை பதில் காவல் மா அதிபர் சீ.டி. விக்கிரமரத்ன நியமித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்கள் குறித்த விவகாரத்தினால் அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..