03,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தவர்கள் 3 பேர் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம்

பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணம், குருநகர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தவர்களான 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு நேற்று (26) சென்றடைந்துள்ளனர்.

 

தமிழகத்தின், ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி கோதண்டராம கோயில் பகுதியில் இலங்கைத் தமிழர்கள் 3 பேர் நிற்பதாக கடலோர பாதுகாப்பு குழும பொலிஸாருக்கு அப்பகுதி மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

அதனையடுத்து அங்கு சென்ற காவல்துறை அங்கே நின்றுகொண்டிருந்த மூவரையும் விசாரித்துள்ளனர்.


அவர்கள் யாழ்ப்பாணம், குருநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் ஜிம்ஸ்ரிவ் என்கிற விஜயன் (46), அவரது மனைவி ராஜினி (45), மகள் திபேந்தினி (18) ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும், அவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வாழ வழியின்றி, கள்ளப்படகு மூலம் வெள்ளிக்கிழமை (26) நள்ளிரவில் தனுஷ்கோடியை சென்றடைந்ததாகவும் தெரிவித்தனர்.


அவர்கள் 3 பேரையும் படகில் அழைத்துச் சென்றவர்கள் நள்ளிரவு 12 மணிக்கு தனுஷ்கோடி கோதண்டராம கோயில் கடலோர பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். 

நள்ளிரவிலிருந்து காலை வரை அவர்கள் அங்கு தவித்தபடி நின்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. 


இதையடுத்து, அந்த மூன்று பேரையும் மீட்டு, கரைக்கு அழைத்துச் சென்ற கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார், நேற்று (26) அவர்களை மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 


அங்கே உரிய விசாரணைக்குப் பின்னர், மூவரும் மண்டபத்தில் உள்ள தாயகம் திரும்பியோர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், கடந்த 2022 மார்ச் 22ஆம் திகதி முதல் தற்போது வரை இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு புகலிடம் தேடிச் சென்ற அகதிகளின் எண்ணிக்கை 257ஆக உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. 




யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தவர்கள் 3 பேர் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு