ஹங்கேரியில் நடைபெற்றுவரும் புடாபெஸ்ட் 2023 உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை பங்குபற்றிய கடைசி நிகழ்ச்சியான ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் கடைசி இடத்தைப் பெற்றது.
இதேவேளை, முதலாவது தகுதிகாண் போட்டியை 2 நிமிடங்கள் 59.05 செக்கன்களில் நிறைவு செய்த இந்தியா ஆசிய சாதனையை நிலைநாட்டி இரண்டாம் இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றது.
சனிக்கிழமை (26) நடைபெற்ற ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் இரண்டாவது தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அப் போட்டியை 3 நிமிடங்கள் 03.25 செக்கன்களில் நிறைவு செய்து கடைசி இடத்தைப் பெற்றது.
இலங்கையின் சிறந்த நேரப் பெறுதி 3 நிமிடங்கள் 01.56 செக்கன்களாக இருந்ததால் இந்தப் போட்டியில் இலங்கை சிறந்த நிலையை அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கை தொடர் ஓட்டக் குழுவினால் மற்றைய அணிகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் போனது.
இரண்டாவது தகுதிகாண் போட்டியில் கடைசி இடத்தைப் பெற்ற இலங்கை, 17 அணிகளுக்கான ஒட்டுமொத்த நிலையிலும் கடைசி இடத்தைப் பெற்றது.
இலங்கை தொடர் ஓட்ட அணியில் அருண தர்ஷன, ராஜத்த ராஜகருண, பபாசர நிக்கு, காலிங்க குமாரகே ஆகியோர் இடம்பெற்றனர்.
ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கை அணியினர் புடாபெஸ்டில் குறைந்த ஆற்றலையே வெளிப்படுத்தினர்.
புடாபெஸ்ட் தகுதிகாண் போட்டியில் ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, பெரிய பிரித்தானியா, பொட்ஸ்வானா, ஜெமெய்க்கா ஆகிய அணிகள் 3 செக்கன்களுக்குள் போட்டியை நிறைவு செய்திருந்தன.
0 Comments
No Comments Here ..