29,Jun 2025 (Sun)
  
CH
விளையாட்டு

கிளப் உலகக் கோப்பையில் ஏன் பங்கேற்கவில்லை? - ரொனால்டோ விளக்கம்

தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஃபிபா கிளப் உலகக் கோப்பைத் தொடரில் தான் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.


கடந்த 2022ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவின் அல்-நசர் அணிக்காக விளையாடி வரும் 40 வயதான ரொனால்டோவின் ஒப்பந்தம் அண்மையில் 2027ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. கிளப் உலகக் கோப்பைத் தொடரில் அல்-நசர் அணி தகுதி பெறவில்லை என்றாலும், இந்தத் தொடரில் பங்கேற்க ரொனால்டோவுக்கு ஃபிபா அழைப்பு விடுத்ததாகத் தகவல்கள் வெளியாகின. இத்தொடரில் இன்டர் மியாமி அணிக்காக லியோனல் மெஸ்ஸி விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


"கிளப் உலகக் கோப்பைத் தொடரில் விளையாட எனக்கு சில வாய்ப்புகள் வந்தன. ஆனால், அது அர்த்தமற்றது என நான் கருதினேன். அதனால் சிறந்த முறையில் ஓய்வு எடுக்க முடிவு செய்தேன். ஏனெனில், இந்த சீசன் மிகவும் பெரியது. உலகக் கோப்பைத் தொடரும் நடைபெற உள்ளது. இதற்கு சிறந்த முறையில் தயாராக ஓய்வு அவசியம்" என்று ரொனால்டோ தெரிவித்தார்.


மேலும், "நான் எனது கிளப் அணிக்காக மட்டுமல்லாது தேசிய அணிக்காகவும் விளையாட விரும்பினேன். அதனால் தான் நேஷன்ஸ் லீக் தொடரிலும் விளையாடினேன். வேறு எதற்கும் நான் செவிகொடுக்கவில்லை. அல்-நசர் அணிக்காக பிரதான கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்புகிறேன். இது நான் நேசிக்கின்ற ஒரு அணி. அதனால் தான் இப்போது எனது ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நிச்சயம் நான் சவுதி சாம்பியன் ஆவேன்" என்றும் அவர் உறுதிபடக் கூறினார். இந்த கருத்துக்களை அல்-நசர் அணி வீடியோ வடிவில் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.


அல்-நசர் அணிக்காக இதுவரை 105 போட்டிகளில் 93 கோல்கள் பதிவு செய்துள்ள ரொனால்டோ, தனது ஒட்டுமொத்த கால்பந்து வாழ்க்கையில் இதுவரை 932 கோல்களை அடித்துள்ளார். இதில் 138 கோல்கள் போர்ச்சுகல் அணிக்காகவும், 794 கோல்கள் கிளப் அணிகளுக்காகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1000 கோல்களை எட்டுவது அவரது அடுத்த இலக்காக உள்ளது.




கிளப் உலகக் கோப்பையில் ஏன் பங்கேற்கவில்லை? - ரொனால்டோ விளக்கம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு