இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 3 ஆவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அவர் அடித்த இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முந்தைய டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 209 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், டெஸ்ட் போட்டியில் 12 ஜூலை 2023 அன்று அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி அதிவேகமாக மூன்று சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
இங்கிலாந்திற்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் 2 ஆவது இன்னிங்சில் 236 பந்துகளை மட்டுமே சந்தித்த ஜெய்ஸ்வால் 214 ஓட்டங்களை குவித்திருந்தார். இதில் 12 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் டெஸ்டில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய இந்தியர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரரானார்.
அதேநேரத்தில், உலக அளவில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். 1996 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் வாசிம் அக்ரம் இந்த சாதனையை படைத்திருந்தார்.
இந்த தொடரில் இதுவரை இந்திய அணி 48 சிக்சர்களை விளாசியுள்ளது. இதன் மூலம் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த தனது முந்தைய சாதனை எண்ணிக்கையை இந்திய அணி தாண்டியுள்ளது. ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்களை இந்தியா விளாசிய போட்டியாகவும் ராஜ்கோட் டெஸ்ட் மாறியுள்ளது. இந்த டெஸ்டில் இந்திய அணி 28 சிக்சர்களை விளாசியுள்ளது.
0 Comments
No Comments Here ..