ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டால் தடுப்பூசி வழங்கும் பணிகளைக்கூட வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாமல் போய்விடுமென இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,
செப்டம்பர் மாதமளவில் நாட்டில் 80 வீதமானவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் எதிர்பார்ப்பில் இருக்கின்றோம்.
தடுப்பூசி வழங்கும் பணிகளை இராணுவத்தினரை பயன்படுத்தி செய்வதை சிலர் எதிர்க்கின்றனர்.
இந்தப் பணிகளில் முப்படையினரை ஈடுபடுத்துகையில், ஒழுக்கம், சுயகட்டுப்பாடு, பொறுமை, நம்பிக்கை என்ற அடிப்படையில் அவர்கள் செயற்படுகின்றனர்.
அதற்கே ஜனாதிபதியும் அவர்களைப் பயன்படுத்தியுள்ளார்.
செப்டம்பர் மாதம் 80 வீதமானவர்களுக்கு தடுப்பூசியளிக்கப்பட்டு பூரணப்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றோம்.
தற்போது டெல்டா நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
விவசாயத்துறையானது அதிகளவு அந்நிய செலாவணியை கொண்டுவருகின்ற துறையாகும். குறிப்பாக தெங்கு உற்பத்தி நிலையங்கள் உள்ளன.
அவற்றை மூடினால் எமக்கு மிஞ்சியிருக்கின்ற வருமான வழிகள், டொலர்கள் வருமான வழிகளும் நிறுத்தப்பட்டு இறுதியில் தடுப்பூசிகளைக்கூட கொண்டுவர முடியாமற் போய்விடும்.
இந்த தடுப்பூசிகள் இலவசமாக கிடைப்பதில்லை. அரசாங்கம் முழுமையாக டொலர்களை செலவு செய்தே தடுப்பூசிப் பணிகளை முன்னெடுக்கின்றது. ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படுகின்ற தடுப்பூசிகளுக்குப் பின்னாலும் டொலர்கள் உள்ளன.
வெளிநாடு சென்று பணியாளர்கள் அனுப்புகின்ற பணம், ஐரோப்பா, மத்திய கிழக்கிலிருந்து வரும் 12 பில்லியன் டொலர்களும் இல்லாமல் போயுள்ளன.
நாட்டை மூடுகின்றபோது பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்கின்ற அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்தும் நடத்திச்செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
விவசாயம், மீன்பிடித்துறைகளுக்கு தொடர்புடைய பிரிவுகளை மூடமுடியுமா? ஏற்றுமதித்துறையில் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனங்களையும் மூடமுடியுமா? இல்லை. இப்படியிருக்கையில் நாட்டை மூடும்படி எதிர்கட்சியினர் தெரிவித்து வருகின்றார்களே தவிர மாற்று யோசனைகளை முன்வைப்பதில்லை என்றார்.
0 Comments
No Comments Here ..