தற்போது வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் வகை கொரோனா வைரஸ் தொடர்பாக சில ஆறுதல் அளிக்கும் தகவல்களும் வெளியாகியுள்ளன.
இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவு என்றும் இறப்பு சதவீதம் குறைவு என்றும் தென்னாபிரிக்காவை சேர்ந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தென்னாபிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ள பி.1.1.529 என்ற வகை கொரோனா தற்போது குறைந்தது 14 நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இது மிகவும் கவலையளிக்கும் கொரோனா வைரஸ் (Variant of Concern) என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.
டெல்டா வகை வைரஸ் 15 முறை உருமாற்றம் அடைந்ததால் ஏற்பட்டதாகும். ஆனால், ஒமிக்ரோன் வகை வைரஸ் அதை விட இரு மடங்குக்கும், அதாவது 30 முறைக்கும் மேலாக உருமாற்றம் அடைந்திருக்கிறது. அதேபோல், மனித செல்களை பற்றுவதற்கான ஒமிக்ரோன் வகை கொரோனாவின் கால்கள் (Spike Protein) 32 முறை உருமாற்றம் அடைந்துள்ளன. இதனால் இந்த வைரஸ் எளிதாக ஒருவரில் இருந்து மற்றொருவருக்கு தொற்றக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
டெல்டா வகை கொரோனாவால் உடலில் ஒக்சிஜன் அளவு வெகுவாக குறையும் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், ஒமிக்ரோன் வகை காரணமாக அத்தகைய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று கூறப்படுகிறதும். மேலும், ஒமிக்ரோன் தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் இதனால் ஏற்படும் உயிரிழப்பு பாதிப்பும் குறைவு என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
0 Comments
No Comments Here ..