16,Apr 2024 (Tue)
  
CH
விளையாட்டு

கொரோனா வைரஸினால் ஆசிய உள்ளக மெய்வல்லுனர் போட்டிகள் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் சீனாவில் தீவிரமாக பரவி வருவதால், அந்நாட்டில் நடைபெற இருந்த ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது. 

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுஹான் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பின்னர் இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷங்காய் ஆகிய நகரங்களுக்கு பரவியது. 

முதலில் வுஹான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன.

கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், சீனாவின் அரச பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் நடைபெறவிருந்த உள்ளூர் மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை ஒத்திவைக்கும்படி அந்நாட்டு ஒலிம்பிக் சங்கம் மற்றும் ஏனைய விளையாட்டு சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, இம்மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில் சீனாவின் ஹன்ங்ஸு (Hangzou) நகரில் 28 நாடுகளின் பங்குபற்றலுடன் 9ஆவது ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஆரம்பமாகவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக அந்தப் போட்டித் தொடரை தற்காலிகமாக ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தின் உறுப்பினர் கரீம் இப்ராஹீம் கருத்து வெளியிட்ட போது, “நாங்கள் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்துவோம். 

அதேபோல, ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக சீனா மெய்வல்லுனர் சம்மேளனம் அறிவித்துள்ளது. 

எனவே, எதிர்வரும் 30ஆம் மற்றும் 31ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தின் நிர்வாக சபை கூட்டத்தின்போது இந்த தொடர் குறித்த இறுதி தீர்மானம் எடுக்கப்படும” என தெரிவித்தார்.

அண்மையில் நிறைவுக்குவந்த 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கங்களை வென்ற ஏழு இலங்கை வீர வீராங்கனைகள் இம்முறை ஆசிய உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றவிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவின் போது டெங்குக் காய்ச்சல் காரணமாக 7 வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், இவர்களுள் 2 வீரர்கள் அவரச சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், உலக உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் சீனாவின் நன்ஜிங்கில் எதிர்வரும் மார்ச் மாதம் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

குறித்த தொடரை நடத்துவது குறித்து சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவின் நிலைமைகளை நாங்கள் அவதானித்து வருவதுடன், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களையும் பெற்று வருகின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெரோனோ வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வுஹான் நகரம் ஆசிய உள்ளக மெய்வல்லுனர் தொடர் நடைபெறவுள்ள ஹன்ங்ஸு நகரத்தில் இருந்து 700 கிலோமீற்றர் தூரத்திலும், உலக உள்ளக மெய்வல்லுனர் தொடர் நடைபெறவுள்ள நன்ஜிங் நகரத்தில் இருந்து 500 கிலோ மீற்றர் தூரத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஜோர்தானுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச குத்துச்சண்டடை சம்மேளனம் அறிவித்துள்ளது. 

அத்துடன், சீனாவின் சுப்பர் லீக் கால்ப்பந்தாட்டத் தொடர், ஏ.எப்.சி கிண்ண சம்பியன் லீக் கால்ப்பந்தாட்ட தகுதிகாண் போட்டிகள், 2022 உலகக் கிண்ண கால்ப்பந்தாட்டத் தொடருக்கான தகுதிகாண் போட்டியாக சீனா மற்றும் மாலைதீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெறவிருந்த போட்டி மற்றும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஷங்காய் நகரில் நடைபெறவிருந்த போர்முயலா-1 மோட்டார் பந்தயத்தின் சீனா கிரேன்ட் பிரிக்ஸ் தொடர் உள்ளிட்ட போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





கொரோனா வைரஸினால் ஆசிய உள்ளக மெய்வல்லுனர் போட்டிகள் ஒத்திவைப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு