தமிழ் சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத ஒரு பெயர் சில்க் ஸ்மிதா. தனது காந்த கண்களால் திரையுலகை கட்டி போட்ட இவர் இன்றளவும் ரசிகர்களால் நினைவு கூறப்பட்டு வருகிறார். 1979 ஆம் ஆண்டு வெளியான 'வண்டிச்சக்கரம்' படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். கவர்ச்சி நடிகையாக மட்டுமில்லாமல் பல குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் பாடல் காட்சி இடம்பெற்றால் போதும் அந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்று முன்னணி நடிகர்களின் படங்கள் கூட இவரின் கால்ஷீட்டிற்காக காத்திருந்த காலம் உள்ளது.
புகழின் உச்சியில் இருந்த போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் கடந்த 1996 ஆம் ஆண்டு தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கண்டெடுக்கப்பட்டார் சில்க் ஸ்மிதா. அவரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்று வரை அவருடைய மரணம் தொடர்பான பல கேள்விகள் மர்மமாகவே உள்ளன.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் தோட்டா பாவாநாராயணா என்பவர் சில்க் ஸ்மிதா பற்றி அண்மையில் நேர்காணல் ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், 'சில்க் ஸ்மிதாவின் இறுதி சடங்கிற்கு திரையுலகை சார்ந்த யாருமே வராத நிலையில் ஒரே ஒரு நடிகர் மட்டும் வந்திருந்தார் என அர்ஜுனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பான சம்பவம் ஒன்றையும் பகிர்ந்த அவர், ஒருநாள் படப்பிடிப்பின் போது நடிகர் அர்ஜுனிடம், நான் இறந்தால் என்னுடைய இறுதி நிகழ்விற்கு நீ வருவியா என கேட்டுள்ளார் சில்க் ஸ்மிதா. இதனைக்கேட்டு பதறிய அவர், என்ன பேச்சு இதல்லாம்? ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க என சில்க் ஸ்மிதாவிடம் கேட்டுள்ளார் அர்ஜுன்.
அதன் பின்னர் நாட்கள் செல்ல செல்ல அர்ஜுன் இதையெல்லாம் மறந்துவிட்டார். சில நாட்கள் கழித்து சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த அர்ஜுன் உடனடியாக அவருடைய இறுதிச்சடங்கிற்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலில் செலுத்தியுள்ளார். இந்த தகவலை பத்திரிக்கையாளர் தோட்டா பாவாநாராயணா பகிர்ந்துள்ளார்.
0 Comments
No Comments Here ..