19,May 2024 (Sun)
  
CH
விளையாட்டு

இலங்கை அணிக்கெதிரான தொடர்- ஐ.பி.எல். தொடர்களிலிருந்து ஆர்ச்சர் விலகல்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் ஜொப்ரா ஆர்ச்சர், மூன்று மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

ஆர்ச்சரின் வலது முழங்கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக, அவரை வைத்தியர்கள் மூன்று மாதம் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதற்கமைய அவர் ஓய்வில் இருக்க தீர்மானித்துள்ளார்.

கடந்த மாதம், தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 24 வயதுடைய இளம் வேகப் பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர் விளையாடியிருந்தார்.

செஞ்சுரியனில் நடைபெற்ற இப்போட்டியின் போது ஜொப்ரா ஆர்ச்சருக்கு வலது முழங்கை பகுதியில் உபாதை ஏற்பட்டது. குறித்த போட்டியில் அவர் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

அதனை தொடர்ந்து உபாதை குணமடையாததன் காரணமாக இரண்டாவது, மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடவில்லை.

அதன் பின்னர் நான்காவது போட்டியிலிருந்து எஞ்சிய ஒருநாள் மற்றும் ரி-20 சர்வதேச தொடர்களிலிருந்து முழுமையாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு தென்னாபிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் இங்கிலாந்தில் வைத்து ஜொப்ரா ஆர்ச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட வலது முழங்கை ஸ்கேன் பரிசோதனையில் குறித்த பகுதியில் அவருக்கு முறிவு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த முறிவு உபாதையிலிருந்து மீளுவதற்கு நீண்ட கால ஓய்வு தேவைப்படுகிறது என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணியிலிருந்து அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அடுத்த மாத இறுதியில் இங்கிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. குறித்த தொடரில் ஜொப்ரா ஆர்ச்சர் விளையாட மாட்டார். மேலும், இந்தியாவில் அடுத்த மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரிலும் ஜொப்ரா ஆர்ச்சர் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் அறிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் இந்திய மதிப்பில். 7.20 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வாங்கியது. ஜொப்ரா ஆர்ச்சர் இதுவரையில் 21 ஐ.பி.எல் போட்டிகளில் 26 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் அவ்வணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான இவர் 2020 ஐ.பி.எல் தொடரிலிருந்து இவ்வாறு விலகியிருப்பமை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு பாரிய இழப்பாக கருதப்படுகின்றது.

ஜொப்ரா ஆர்ச்சரின் உபாதை தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜொப்ரா ஆர்ச்சருக்கு ஏற்பட்ட உபாதை தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு முறிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர் மற்றும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்க மாட்டார். எதிர்வரும் ஜூன் மாதம் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடருக்கு ஜொப்ரா ஆர்ச்சர் திரும்புவார் என எதிர்பார்க்கின்றறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது சகலதுறை துடுப்பாட்டத்தின் மூலம் மேற்கிந்திய தீவுகள் இளையோர் அணியில் விளையாடி, பின்னர் இங்கிலாந்துக்கு சென்று கடந்த மே மாதம் ரி-20 சர்வதேச கிரிக்கெட் போட்டி மூலமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த ஜொப்ரா ஆர்ச்சர் இதுவரையில் இங்கிலாந்து அணிக்காக 21 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கடந்த வருடம் அயர்லாந்து அணியுடனான போட்டியில் ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்ட ஜொப்ரா ஆர்ச்சர் இதுவரையில் 14 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 23 விக்கெட்டுகளையும், ஆஷஸ் தொடரில் டெஸ்ட் அறிமுகம் பெற்று இதுவரையில் வெறும் 7 போட்டிகளில் 30 விக்கெட்டுகளையும், ஒரு ரி-20 சர்வதேச போட்டியில் விளையாடி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.





இலங்கை அணிக்கெதிரான தொடர்- ஐ.பி.எல். தொடர்களிலிருந்து ஆர்ச்சர் விலகல்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு