பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் 8ஆவது லீக் போட்டியில், முல்தான் சுல்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
முல்தான் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், முல்தான் சுல்தான் அணியும், பெஷாவர் ஸல்மி அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற முல்தான் சுல்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய பெஷாவர் ஸல்மி அணி, 18.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஹெய்டர் அலி 47 ஓட்டங்களையும், லியாம் டாவ்சன் 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
முல்தான் சுல்தான் அணியின் பந்துவீச்சில், சொஹைல் டன்வீர் 4 விக்கெட்டுகளையும், மொஹமட் இர்பான் மற்றும் மொஹமட் இலியாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஷாயீன் அப்ரிடி மற்றும் இம்ரான் தஹீர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 124 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய முல்தான் சுல்தான் அணி, 14.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் முல்தான் சுல்தான் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியை பதிவு செய்தது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ரீலோ ரோஸ்சொவ் ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும், குஷ்தீல் ஷா ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பெஷாவர் ஸல்மி அணியின் பந்துவீச்சில், வஹாப் ரியாஸ் 2 விக்கெட்டுகளையும், ஹசன் அலி மற்றும் ராஹட் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 3.3 ஓவர்கள் நிறைவில் ஒரு மெய்டின், இரண்டு உதிரிகள் அடங்களாக 13 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்த சொஹைல் டன்வீர் தெரிவு செய்யப்பட்டார்.
0 Comments
No Comments Here ..