உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவியுள்ளது. வைரசால் பாதிக்கப்பட்ட நபர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் வூகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்தியாவிலும் இந்நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டின், அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சஞ்சீவ குமார் வெளியிட்டுள்ள தகவலில், லடாக்கைச் சேர்ந்த இருவருக்கும், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். லடாக்கைச் சேர்ந்தவர்கள் ஈரான் நாட்டில் இருந்து வந்ததாகவும், தமிழகத்தைச் சேர்ந்தவர் ஓமன் நாட்டில் இருந்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது நபர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த மாதிரிகளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தீவிர கண்காணிப்பு பிரிவில் உள்ளதாகவும், அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..