மத்தியபிரதேச மாநிலம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளி மீது ஒரு நபர் சிறுநீர் கழித்தார். இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பா.ஜ எம்எல்ஏவின் நெருங்கிய உறவினரும், பா.ஜ பிரமுகருமான பர்வேஷ் சுக்லா என்பதை கண்டுபிடித்தனர்.
தலைமறைவாக இருந்த பர்வேஷ் சுக்லாவை போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர். அவரை ரேவா மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் மாநில அரசு உத்தரவுப்படி சுக்லாவின் வீட்டை திகாரிகள் இடித்து தள்ளினர்.
இந்நிலையில் பாஜ பிரமுகரால் அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் தஷ்மத் ராவத்தை போபாலில் உள்ள தனது இல்லத்துக்கு வரவழைத்த முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அவரது பாதங்களை தண்ணீர் விட்டு கழுவினார்.
இளைஞரை அவமதிக்கும் வகையில் நடந்த சம்பவத்துக்காக அவரிடம் முதல்வர் வருத்தம் தெரிவித்ததோடு, மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இனி தஷ்மத் எனது நண்பர் என்றும் கூறி பழங்குடியின இளைஞரை முதல்வர் மகிழ்ச்சியடைய செய்தார்.
இதனை தொடர்ந்து தற்போது, பழங்குடி இனத்தை சேர்ந்த அந்த நபருக்கு ரூ.5 லட்சம் நிவாரணமும், வீடு கட்டிக்கொள்ள மேலும் ரூ.1.50 லட்சமும் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் வழங்கினார்.
0 Comments
No Comments Here ..