கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானத்தை இயக்க எயார் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் பரவி வருகிறது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை 106 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், வுஹான் நகருக்கு மக்கள் செல்லவும், அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஜப்பான், கொரியா, தாய்வான் மற்றும் நேபாள நகரங்களுக்கும் பரவியுள்ளது.
இந்த நகரில் ஏராளமான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவம் படிக்கும் மாணவர்கள். இது இந்திய அதிகாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய விமானப்போக்குவரத்து துறை மற்றும் சுகாதாரத்துறை செய்து வருகிறது.
இந்தியர்களை அழைத்து வர வுஹான் நகரில் இருந்து மும்பைக்கு போயில் 747 விமானத்தை இயக்க எயார் இந்தியா தயார் நிலையில் உள்ளது.
இதற்காக சீன அரசு, வுஹான் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி கிடைத்தவுடன் சிறப்பு விமானம் இயக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..