27,Apr 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

30 வருடங்களுக்கு பிறகு வாச்சாத்தி மக்களுக்கு கிடைத்த நீதி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தி மலை கிராம வன்கொடுமை வழக்கில், விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. இதையடுத்து, வாச்சாத்தி கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்

சந்தன மரம் கடத்தல் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில்,  1992-ஆம் ஆண்டு ஜூன் 20-ம் நாள், தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப் பகுதியில் உள்ள அரூர் அடுத்த வாச்சாத்தி கிராமத்தில் வனத் துறையினர், காவல் துறையினர் வருவாய்த் துறையினர் திடீரென கிராமத்திற்குள் நுழைந்து சோதனை என்ற பெயரில் மலை கிராம மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.

இதில் கிராமத்தில் உள்ள வீடுகளையும், உடைமைகளையும் அடித்து நொறுக்கி, பெண்களை கடுமையாக தாக்கினார். இதனைத் தொடர்ந்து வாச்சாத்தி கிராமத்தில் உள்ள ஆலமரத்தடியில் அனைவரையும் கொண்டு வந்து மிகுந்த சித்தரவதைக்கு உள்ளாக்கினார். இந்நிலையில் 90 பெண்கள், 15 ஆண்கள், 28 குழந்தைகள் என 133 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் 18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தும், வனத்துறை அலுவலகத்தில் வைத்து கொடுமையான முறையில் தாக்குதலும் நடத்தினர். அங்கு, அரங்கேற்றிய இந்த கொடூரங்களும், வக்கிரங்களும் மனித குலத்தால் நினைத்துப் பார்க்க முடியாதவையாக விளங்குகிறது.


இதனையடுத்து, வாச்சாத்தி மக்கள் சார்பாக வழக்கு பதிவு செய்ய போராடி 269 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 126 வனத்துறையினரும், 84 காவல் துறையினர், 5 வருவாய்த் துறையினர் என 269 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு விசாரணை முடிந்து. கடந்த 2011 செப்டம்பர் 29ஆம் தேதி தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் 269 பேரை குற்றவாளிகளாக உறுதி செய்தது. இதில் 54 பேர் உயிரிழந்த நிலையில் 215 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதில், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த, 12 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் சிலருக்கு இரண்டு ஆண்டு முதல் 7 ஆண்டு வரை தண்டனை வழங்கப்பட்டது.


இந்நிலையில், தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி வேல்முருகன் கடந்த மார்ச் 4ஆம் தேதி சம்பந்தப்பட்ட வாச்சாத்தி கிராமத்தில் நேரில் ஆய்வு செய்ய வந்திருந்தார். இந்த ஆய்வு முடிந்த பிறகு இன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து, மேல்முறையீட்டு மனு முழுவதையும் தள்ளுபடி செய்தார். மேலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இதில், 50 சதவீத தொகையை இவ்வழக்கில் தண்டனை பெற்றவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் தமது தீர்ப்பில் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், வாய்ப்பு இல்லாதவர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து தர வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது



மேலும், நீதிமன்றம் அறிவுறுத்தியபடி கிராம மக்களுக்கு தேவையான வேலை வாய்ப்பு, அடிப்படை வசதிகளை உடனடியாக தமிழ்நாடு அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றும், விடுபட்ட சிலருக்கு இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என்றும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நலத்திட்டங்களையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு நீதிமன்றத்தின் மீது, அடித்தட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்




30 வருடங்களுக்கு பிறகு வாச்சாத்தி மக்களுக்கு கிடைத்த நீதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு