06,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

மது போதையில் வாகனம் ஓட்டுவோரைக் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சாலை விபத்தில் காயமடைந்த மணிகண்டன் என்பவர், தனக்கு வழங்கப்பட்ட ரூ. 4 லட்சத்து 37 ஆயிரத்து 950ஐ இழப்பீட்டுத் தொகையை அதிகரித்துத் தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் தான் மதுபோதையில் வாகனம் ஓட்டி சென்றதாகவும், அவர் தற்போது எந்த ஊனமும் இல்லாமல் நல்ல முறையில் இருப்பதாகவும் இன்சுரன்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரணையின்போது உயர் நீதிமன்றத்திற்கு, பாதிக்கப்பட்ட மணிகண்டன் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதித்த சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள், மூளையில் அடிபட்ட அவர் 100 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர்.

அதன் அடிப்படையில் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட 4 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை 67 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுவினால் ஏற்படும் தீங்குகள், பாதிப்புகள் பட்டியலிட்ட நீதிபதிகள், மதுபோதையில் வாகனம் ஓட்டிச் செல்வதைக் கண்காணிக்கத் தனிப்படைகளை அமைக்க வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் மது போதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்களைக் கைது செய்ய வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் வலியுறுத்தியுள்ளனர்.

வாகன ஓட்டிகள் மதுபோதையில் செல்கிறார்களா இல்லையா என்பதைக் கண்டறிய போதுமான அளவுக்கு மூச்சுப் பரிசோதனை கருவிகளைப் போலீசுக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மது போதையில் வாகனங்களை இயக்க முடியாதபடி, வாகனங்களில் பிரத்தியேக கருவிகளைப் பொருத்தும்படி, வாகன உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிடுவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு

நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

அதேபோல் மதுபோதையில் வாகனம் ஓட்டி சென்றதாக மாதந்தோறும் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்? என்பது குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 6ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதற்கிடையே மதுபோதை குறித்துக் கண்டறியும் கருவியால் கொரோனா பாதிப்பு பரவ வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இப்படி கொரோனா பீதியில் உள்ள போலீசார், மதுபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்களைக் கண்டறிந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து சோதனை செய்யும்படி ஒரு உத்தரவு தமிழ்நாடு முழுவதும் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.




மது போதையில் வாகனம் ஓட்டுவோரைக் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு