மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு லஞ்சமாக பெண்களை அனுப்பி வைத்தனர் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக வெளியாகியுள்ள செய்திகளைத் தொடர்ந்து, மோடி மறுப்பு தெரிவிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்திய மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் மருத்துவ நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நரேந்திர மோடி நடத்திய சந்திப்பின்போது, அந்தத் துறையில் நடக்கும் சந்தைப் படுத்துதல் உத்திகள் குறித்து பேசியபோதே நரேந்திர மோதி அவ்வாறு பேசியதாக செய்திகள் வெளியாகின.
தாம் அவ்வாறு பேசவில்லை என்று மோடி மறுப்பு தெரிவிக்க வேண்டும் அல்லது தாம் தெரிவித்ததை நிரூபணம் செய்ய முடியவில்லை என்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவர்கள் அமைப்பான இந்திய மருத்துவர் சங்கம் (Indian Medical Association) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு பெண்களை அனுப்பி வைப்பதாக அரசுக்கு தெரிந்திருந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்காமல், பிரதமர் அலுவலகத்துக்கு அழைத்து ஏன் பேச வேண்டும் என்று அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அவ்வாறான மருத்துவர்களின் பெயர்களை பிரதமர் வெளியிட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
புனேவில் உள்ள ஓர் அமைப்பு, தாங்கள் 2019இல் நடத்திய ஆய்வில் மருத்துவர்கள் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், வெளிநாட்டு பயணங்கள், பெட்ரோல் வாங்குவதற்கான கார்டுகள் உள்ளிட்டவற்றை மருந்து உற்பத்தி நிறுவனங்களிடம் லஞ்சமாக வாங்குவதாக தெரியவந்துள்ளது என்று தெரிவித்தது.
0 Comments
No Comments Here ..