வடமாநிலங்களில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
டெல்லி, ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தராகண்ட், இமாச்சல், காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் ஒரே நாளில் 15.3 சென்டி மீட்டர் மழை பதிவானது. இது 41 ஆண்டுகளில் இல்லாத அளவு (ஜூலை மாதத்தில்) ஆகும்.
இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. யமுனை ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது. மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இமாச்சலில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, அங்கு 7 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் ஓடும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குல்லு நகருக்கு அருகே. பாலங்கள், நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இம்மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் தொடர்பான விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியில் ஓடும் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆற்றில் தற்போது 206.24 மீட்டர் உயரத்துக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் அபாய அளவு 205.33 மீட்டர். அபாய அளவைத் தாண்டி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் 207.49 மீட்டர் அளவுக்கும் வெள்ளப்பெருக்கு உள்ளது. வெள்ளப் பெருக்கு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ், "கடந்த 8, 9, 10 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. யமுனா ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தைத் தாண்டி பாய்ந்தோடுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு முழு எச்சரிக்கையுடன் இருக்கிறது. கரையோர மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. யமுனை ஆற்றில் வெள்ளம் அபாய கட்டத்தை நாங்கள் கணித்ததைவிட ஒரு நாள் முன்பாகவே எட்டி விட்டது. ஹரியானாவில் இருந்து அதிக அளவில் வெள்ள நீர் வருவதே இதற்குக் காரணம்" என தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..