இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட பத்து நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு சீனாவின் கிங்டாவோ நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை கடுமையாகக் கண்டித்துப் பேசினார்.
ராஜ்நாத் சிங் தனது உரையில், "சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தங்கள் கொள்கையின் கருவியாகப் பயன்படுத்துகின்றன; பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கின்றன. இத்தகைய நாடுகளை விமர்சிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு தயங்கக்கூடாது," என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், "பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகள் பயங்கரவாதத்தை ஒருமித்த குரலில் கண்டிக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார்.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் வடிவம், இந்தியாவில் லஷ்கர்-இ-தொய்பாவின் முந்தைய தாக்குதல்களுடன் ஒத்திருப்பதாக ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார். மத அடையாளத்தின் அடிப்படையில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"பயங்கரவாதத்திற்கு எதிராகவும், எல்லை தாண்டிய பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தகர்க்கவும் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தியது. தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், குற்றவாளிகளைத் தண்டிக்கவும் இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு," என்று ராஜ்நாத் சிங் ஆணித்தரமாகக் கூறினார்.
"எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட அனைத்துக் கண்டிக்கத்தக்க பயங்கரவாதச் செயல்களுக்கும் காரணமானவர்கள், அமைப்பாளர்கள், நிதியளிப்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்," என்று அவர் தெரிவித்தார்.
மேலும், "நமது பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நம்பிக்கை ஆகியவற்றில் நிலவும் பற்றாக்குறை மிகப்பெரிய சவால்களாகும். இந்தப் பிரச்சினைகளுக்கான மூல காரணம் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலில் உள்ளது. பயங்கரவாதத்துடனும், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பயங்கரவாதக் குழுக்களின் கைகளில் பேரழிவு ஆயுதங்களின் பெருக்கத்துடனும் அமைதியும் செழிப்பும் இணைந்து வாழ முடியாது. இந்தச் சவால்களைச் சமாளிப்பதற்குத் தீர்க்கமான நடவடிக்கை தேவை. நமது கூட்டுப் பாதுகாப்புக்காக இந்தத் தீமைகளுக்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்," என ராஜ்நாத் சிங் தனது உரையை நிறைவு செய்தார்.
0 Comments
No Comments Here ..