12,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

130 கோடி இந்தியர்களும் வீட்டில் முடங்கியிருக்க யார் காரணம்?

கண்ணுக்கே புலப்படாத கொரோனா எனும் வைரஸ் கிருமி, ஒட்டுமொத்த உலகின் கண்களிலூம் இன்று விரலைவிட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது.

வல்லரசுகள் என்றும், வளர்ந்த நாடுகள் என்றும் சொல்லிக் கொள்ளும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளின் இதயத்தை கொரோனா வைரஸ் நடுநடுங்க வைத்துள்ளது.

இந்தியாவில் இரண்டாம் நிலையில் உள்ளதாக கூறப்படும் கொரோனா வைரசின் தாக்கம் மூன்றாம் நிலையான சமூகப் பரவலை எட்டாமல் இருக்க, ஊரடங்கு உத்தரவு என்ற கடினப்பிரயத்தனத்தை மத்திய, மாநில அரசுகள் கையாண்டு வருகின்றன.

மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை என, 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மே மாதம் 4 ஆம் தேதி வரை இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டுவிடும் என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இயல்பு வாழ்க்கை மீண்டும் எப்போது திரும்பும் என்று ஒட்டுமொத்த தேசமும் ஏங்கி தவித்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய மோசமான சூழலில், நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வேகமெடுத்துள்ளதற்கு, டெல்லியில் அண்மையில் நடைபெற்ற தப்லீத் ஜமாத் மாநாடு முக்கிய காரணமாக உள்ளதென்று, ஆட்கொல்லி நோயான கொரோனாவுக்கு மதச்சாயம் பூசப்பட்டுள்ளது.

இதனை மத்திய, மாநில அரசுகளே தொடர்ந்து கூறிவருவது தான் கொடுமை. இதன் விளைவாக , 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி தொடங்கி, கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழா வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சிகள் கொரோனா பரவலுக்கு காரணமாக இல்லையா என்ற எதிர்கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

இப்படி கொரோனாவை வைத்து சமூகவலைதளங்கள் உள்ளிட்டவற்றில் மதரீதியிலான வாத, எதிர்வாதங்கள் நடைபெற்று வந்தாலும், உண்மையில், கொரோனா அச்சத்தால், 130 கோடி இந்தியர்களும் வாரக்கணக்கில் வீட்டில் முடங்கி கிடப்பதற்கு மத்திய, மாநில அரசுகளின் கவனக் குறைவும், முன்னெச்சரிக்கையுடனான செயல்பாடும் இல்லாததுதான் முக்கிய காரணம் என்பது தான் கசப்பான உண்மை.

ஆம்... சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், ஜனவரி மாதத்தில் அங்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருந்தது. அப்போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் அரசுகள், அது ஏதோ சீனாவுக்கு மட்டும் வந்த சோதனையாக கருதி அசட்டையாக இருந்துவிட்டன.

அதன் பின்னர், இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா என்று வளர்ந்த நாடுகளிலேயே கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்துக்கு நித்தமும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாவதை பார்த்தபோதுதான்... கொரோனா பாதிப்பின் தீவிரத்தை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் உணரத் தொடங்கி தாமதமாக விழித்துக் கொண்டன.

கொரோனா அபாயத்தை உணர்ந்ததன் வெளிப்பாடாக, நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட மார்ச் 16 தேதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிடுகிறது.

நாடு முழுவதும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக மார்ச் 25 ஆம் தேதி, ரயில்வே அமைச்சகம் அதிரடியாக அறிவிக்கிறது.

மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கிய கோயில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்படுவதாக, மார்ச் 19 ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிடுகிறது. இவை எல்லாவற்றுக்கும் உச்சமாக, மார்ச் 24 தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 14 ஆம் தேதி வரை, 21 நாட்கள் நாடு முழுவதும்

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அதிரடியாக அறிவிக்கிறார்.

இப்படி மார்ச் 16 முதல் மார்ச் 24 வரையிலான ஒரே வாரத்தில், கொரோனா பரவல் தடுப்புக்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்த மத்திய, மாநில அரசுகள், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் நிலையையே எட்ட முடியாதபடி செய்வதற்கான வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டன என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.

பல்வேறு உலக நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பிறகு தமிழகம் திரும்பியவர்கள் அனைவரும் தயவுசெய்து தங்களை தாங்களே வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை நாட வேண்டும்" என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் ஃபாரின் ரிட்டன்களின் காலில் விழாத குறையாக திரும்பத் திரும்ப கூறி வந்தனர்.

ஒருகட்டத்தில், பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பிறகு தமிழகம் திரும்பியவர்கள், தங்களது வெளிநாட்டு பயணம் குறித்த விவரங்களை அரசுக்கு தெரிவிக்காவிட்டால், அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த எச்சரிக்கையின் விளைவாகவும், தமிழக அரசின் நடவடிக்கையாலும், பிப்ரவரி 15 முதல் மார்ச் 15 வரையிலான ஒருமாத காலத்தில் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் திரும்பிய பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 45 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்களுடன் தொடர்பில் இருந்ததன் விளைவாக கொரோனா அறிகுறிகளுக்கு ஆளாகியுள்ள சுமார் 40 ஆயிரம் பேரும் அவரவர் வீடுகளிலோ, மருத்துலமனைகளிலோ தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், இந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கை அரசு எடுக்கப்படுவதற்குள் கொரோனா இரண்டாம் நிலையை எட்டிவிட்டது தான் சோகம்.

மாறாக, பிப்ரவரி 15 முதல் மார்ச் 15 வரையிலான ஒரு மாதக்காலத்தில், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள் யாராக இருந்தாலும், தயவுதாட்சண்யம் பார்க்காமல் அவர்களை ஏர்போர்ட்டிலேயே மடக்கி, அரசின் தனிமைப்படுத்தல் முகாமில் 14 முதல் 28 நாட்கள் வரை வைத்து, தமிழக அரசு கண்காணித்திருக்க வேண்டும்.

இதே நடைமுறையை பிற மாநிலங்களும் பின்பற்றி இருக்க வேண்டும். மத்திய அரசும் இந்த வழிமுறையை பின்பற்றும்படி வலியுறுத்தி இருக்க வேண்டும்.

அவ்வாறு செய்திருந்தால், கொரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக (மீடியம்) இருக்கும் ஃபாரின் ரிட்டன்ஸ் பேர்வழிகளான சில, பல லட்சம் பேர் மட்டும் அதிகபட்சம் ஒரு மாதம் அரசின் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்திருந்தால் போதுமானதாக இருந்திருக்கும்.

கொரோனாவும் இந்தியாவில் இரண்டாம் நிலையை எட்டியிருக்காது. அது மூன்றாம் நிலையான சமூக பரவலை எட்டிவிடுமோ என்ற அச்சத்தில் 130 கோடி இந்திய மக்களும் இன்று வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய அவலநிலையும் ஏற்பட்டிருக்காது.

ஆனால் என்ன செய்வது?... கொரோனாவின் கோரமுகத்தை மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே அடையாளங்காண தவறியவதற்கா இன்று ஒட்டுமொத்த தேசமும் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கிறது.





130 கோடி இந்தியர்களும் வீட்டில் முடங்கியிருக்க யார் காரணம்?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு