பி.வாசு இயக்கத்தில் உருவாகவுள்ள 'சந்திரமுகி 2' படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா ஜோதிகா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சந்திரமுகி'. சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது.
இதனைத் தொடர்ந்து 'சந்திரமுகி 2' குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது. ஆனால், அதிகாரபூர்வமாக எதுவுமே அறிவிக்கப்படாமல் இருந்தது.
இதனிடையே ரஜினியின் அனுமதியுடன் 'சந்திரமுகி 2' உருவாகிறது. பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. கரோனா அச்சுறுத்தலால் அந்தப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
வேட்டையன் மன்னனுக்கும், சந்திரமுகிக்கும் இடையே ஆன மோதலை அடிப்படையாகக் கொண்டு கதைகளத்தை அமைத்துள்ளார் பி.வாசு. முதல் பாகத்தில் சந்திரமுகியாக ஜோதிகா நடித்து பெரும் பெயர் மற்றும் விருதுகள் வென்றார். அவரை இந்தப் படத்தில் சந்திரமுகியாக நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையில் இருக்கிறது படக்குழு.
ஜோதிகாவுக்கு திருமணமாகி விட்டதால், இரட்டை கதாபாத்திரமாக உருவாக்கி அதில் ஒன்றில் ஜோதிகாவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தவுடன் ஜோதிகாவிடம் இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
சந்திரமுகி 2' கதையைக் கேட்டுவிட்டு, ஜோதிகா ஒப்புக் கொள்வாரா என்பது விரைவில் தெரியவரும்.
0 Comments
No Comments Here ..